யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளிய கரிகெட்டி பகுதியில் இன்று (30) காலை தீப்பிடித்து எரிந்ததில் பஸ் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஈஸ்வரன் பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்து கடந்த 29ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பேருந்தில் தீப்பிடித்த போது, அனைத்து இருக்கைகளும் பயணிகள் நிரம்பியிருந்ததாகவும், யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு பேருந்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேருந்து தீப்பிடித்ததில் ஒரு சில பயணிகளின் லக்கேஜ்கள் மட்டுமே எரிந்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்திற்கு முன்னர் புத்தளத்தை அண்மித்த பாதையில் பயணிகள் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததாகவும், தேனீர் அருந்துவதற்காக பஸ் வண்டியை நிறுத்திய போது சாரதி பஸ்சை சோதனையிட்ட போதும் விபத்து ஏதும் ஏற்படாததற்கான அறிகுறி காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பஸ் தீப்பிடித்ததையடுத்து, புத்தளம் நகரசபை தீயணைப்புத் திணைக்களம் மற்றும் பலவியா விமானப்படை தீயணைப்புத் திணைக்களம் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், அதற்குள் பஸ் முற்றாக எரிந்து நாசமானது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்