අද කාලගුණය 2024.11.27
இன்றைய வானிலை
2024.11.27
சக்தி மிக்க தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து தென்கிழக்காக சுமார் 190 km தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது இன்று மேலும் தீவிரமடைந்து சூறாவளியாக வலுவடைந்து இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாழ் அமுக்கத்தின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் காற்றுடன் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களிலும் 150 mm இலும் கூடிய மிகப் பலத்த மழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
வங்காள விரிகுடாவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் காணப்படுவதனால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். இந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 km ஆக அதிகரித்ததும் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 – 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது கரையை தொடக்கூடும் தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
கலாநிதி மொஹமட் சாலிஹீன்.