( காளிமுத்து சத்தியசீலன் )
இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (16) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதம் இருக்க ஸிம்பாப்வே 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற 5 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் ஸிம்பாப்வே வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 என ஸிம்பாப்வே சமப்படுத்திக்கொண்டுள்ளது. முதலாவது போட்டியில் இலங்கை 3 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.
க்ரெய்க் ஏர்வின் குவித்த அரைச் சதம், கடைசி 2 ஓவர்களில் லூக் ஜொங்வே, க்ளைவ் மதண்டே ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன ஸிம்பாப்வேயின் வெற்றியை உறுதிசெய்தன.
மொத்த எண்ணிக்கை 22 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் டினாஷே கமுன்ஹூகம்வே (12) ஆட்டம் இழந்தார்.
எனினும் க்ரெய்க் ஏர்வின், ப்றயன் பெனெட் (25) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸிம்பாப்வே அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் சிக்கந்தர் ராஸா (8), சோன் வில்லியம்ஸ் (1), சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய க்ரெய்க் ஏர்வின், ரெயான் பேர்ல் (13) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.
க்ரெய்க் ஏர்வின் 54 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார்.
காளிமுத்து சத்தியசீலன்