புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் , தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளிப்பு…

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29.12.2023) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், உத்தேச கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழி வகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில், சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி துறையில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தாங்கிகள், துறைமுகம், ரயில்வே தொடர்பான கூட்டுத் திட்டங்கள் மற்றும் விவசாயம் மற்றும் கடற்றொழில் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுபடுத்தி நிவாரணப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். திரவத்தன்மை சிக்கல்களை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவித்திட்டத்தைப் பெறுவதற்கு இந்தியா அளித்த ஆதரவிற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, 2007 முதல் 2010 வரை இலங்கையில் பணியாற்றிய காலத்தை நினைவு கூர்ந்ததுடன், இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை கொழும்புக்கு விஜயம் செய்யக் கிடைத்தமையை பெரும் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார். இலங்கையின் நலனுக்காக நாட்டின் தலைவர்களின் வழிகாட்டலின்படி இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படுவதும், இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக்கொண்ட இந்திய-இலங்கை ஒத்துழைப்பின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அதன் பதினான்கு அம்ச வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் தனது பணியாகும் என இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே, ஆலோசகர் எல்டஸ் மேத்யூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *